பழனி வட்டம், புஷ்பத்தூர் ஊராட்சியில் உள்ள விஷ்ணுவர்தன் நகர் (புல எண்: 376/1B) பகுதிக்கு ஒரு நெகிழ்ச்சியான வரலாறு உண்டு. 1976-ஆம் ஆண்டு, வினோபாவேவின் பூமிதான இயக்கத்தின் கீழ் திரு. நாச்சிமுத்து கவுண்டர் என்பவரிடமிருந்து பெறப்பட்டு, நிலமற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒப்படைக்கப்பட்ட சுமார் 6 ஏக்கர் நிலம் அது.

ஆனால், ஆண்டுகள் பல கடந்தும் அந்த நிலத்தில் அசல் பயனாளிகள் உழவு செய்ய முடியாதபடி, நிலவுடைமையாளரின் வாரிசுகள் தடுத்து வந்தனர். சட்டத்திற்குப் புறம்பாகப் பத்திரப் பதிவுகள் மேற்கொண்டு, சில சென்ட் நிலங்களை வெளிநபர்களுக்கு விற்பனையும் செய்தனர். இந்த ஆக்கிரமிப்பாளர்களுக்குப் பின்னணியில் இருந்து இயங்கியதாகக் குற்றம்சாட்டப்படுபவர், புஷ்பத்தூர் ஊராட்சியின் திமுகவின் பிரமுகர் ஆவார். இவர் கடந்த திமுக ஆட்சியில், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தொடர் போராட்டங்கள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளின் விளைவாக இந்த நிலம் மீட்கப்பட்டது. அப்போதைய உணவு வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்களின் பரிந்துரையின் பேரில், “மீட்கப்பட்ட உபரி நிலங்கள் முற்றிலும் வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே இலவசமாகச் சென்றடைய வேண்டும்” என்ற நல்ல நோக்கத்தோடு இத்திட்டம் செயலாக்கம் பெற்றது.
ஆனால், அரசின் இந்த நதிநீர், ஏழைகளின் தாகம் தீர்ப்பதற்குப் பதிலாக ஒரு தனிநபரின் கல்லா கட்டும் குளமாக மாறியிருப்பதுதான் தற்போதைய பேரதிர்ச்சி!
அரசின் திட்டத்தை அப்படியே தலைகீழாக மாற்றித் தனது சொந்த லாபத்திற்குப் பயன்படுத்தத் தொடங்கிய திமுக பிரமுகர், உண்மையிலேயே வீடற்ற சில எளிய மக்களுக்கு மட்டும் பெயருக்கு இடங்களை ஒதுக்கிவிட்டு, வசதி படைத்த பலருக்கு இந்த இலவச நிலங்களை ஒதுக்கியதாகப் புகார்கள் வெடித்துள்ளன. ஒவ்வொரு பட்டாவிற்கும் பல லட்ச ரூபாய் கைமாறியதாகக் அப்பகுதி மக்கள் கொதிக்கின்றனர்.

அத்துடன் நின்றுவிடவில்லை இந்த அக்கிரமம். நிலம் பெற்ற பயனாளிகள் அனைவரும் ‘கலைஞர் கனவு இல்ல’ திட்டத்தின் கீழ் மட்டுமே வீடுகளைக் கட்ட வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமா? வீடுகளைக் கட்டும் முழுப் பொறுப்பையும் சம்பந்தப்பட்ட திமுக பிரமுகரின் நிறுவனத்திடமே ஒப்படைக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
சொந்தமாக வீடு கட்டப்போகிறோம் என்ற கனவோடு, ஏழைப் பொதுமக்கள் தங்கள் நகை அடமானம் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் கடன் வாங்கி அஸ்திவாரப் பணிகளைத் தொடங்கினர். அடுத்த கட்டமாக, தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் ‘கலைஞர் கனவு இல்ல’ திட்டத்தின் முதல் தவணைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு வரவிருந்தது. ஆனால், அதற்கு முன்பாகவே பயனாளிகளின் வங்கிப் புத்தகங்கள் மற்றும் கையொப்பமிட்ட ‘காசோலைகளை’ முன்கூட்டியே திமுக பிரமுகர் வாங்கி வைத்துக்கொண்டு, அரசு நிதியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து முறைகேடு செய்ததாகக் கண்ணீர்மல்கக் கூறுகின்றனர் பொதுமக்கள்.
இதுபோதாதென்று, “மீதி வீட்டைப் பூர்த்தி செய்ய வங்கி மூலம் கடன் வாங்கித் தருகிறோம்” எனக் கூறி, ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட பட்டா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வைத்து, ஒவ்வொரு பயனாளியின் பெயரிலும் ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை கடன்களைப் பெற்றுக்கொடுத்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த ஒரு பகுதியிலேயே திமுக பிரமுகர் ரூ.2 கோடிக்கும் மேல் முறைகேடு செய்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
“அரசாங்கம் எங்களுக்கு ஒதுக்கிய ‘கலைஞர் நகர்’ பகுதி, இப்போது எங்கள் வாழ்நாளின் மிகப்பெரிய துயர பூமியாக மாறிவிட்டது” என்று புலம்புகின்றனர் அப்பகுதியினர். இதில், அங்குள்ள ஒரு பெண்மணி நம்மிடம் கண்ணீருடன் பகிர்ந்துகொண்டது நெஞ்சைப் பிழிகிறது:
“என் வாழ்நாளில் ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதுதான் பெரிய கனவு. அரசின் உதவியோடும், என் சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தோடும் கடன் இல்லாமல் வீடு கட்ட ஆசைப்பட்டேன். ஆனா, இந்த ‘கலைஞர் கனவு இல்ல’ திட்டம் எங்களை மொத்தமாகவே கடனில் மூழ்கடித்துவிட்டது. சுயஉதவிக் குழு கடனுக்கு வார வட்டியும், வங்கி கடனுக்கு மாதத் தவணையும் செலுத்த முடியாமல் தினமும் செத்துச் செத்துப் பிழைக்கிறோம்…”
இது ஒருபுறமிருக்க, வயலூரிலிருந்து மயிலாபுரம் செல்லும் தார்ச் சாலையில் அமைந்துள்ள நல்லூர் கிராமத்தில் (புல எண்: 293/1A), சுமார் 9 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள தனிநபர் ஆக்கிரமிப்புகளை …
