திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மதனீசா முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில், 2001 – 2002 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு (10th Batch) பயின்ற மாணவ – மாணவிகளின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மறுசந்திப்பு (Silver Jubilee Alumni Reunion) பெருவிழா பள்ளி வளாகத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
”காலங்கள் மாறினாலும்… நினைவுகள் மாறாதே!”:
“நினைவுகள் நம் உறவு… மீண்டும் ஒரு சந்திப்பு!” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்த நெகிழ்ச்சியான நிகழ்வில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு மருத்துவர்கள், பொறியாளர்கள், அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள் எனப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முன்னாள் மாணவ – மாணவிகள் தங்களது குடும்பத்தினருடன் ஒன்று கூடினர். பள்ளிப் பருவத்து குறும்புகள், கடைசி பெஞ்ச் நினைவுகள், மதிய உணவு பகிர்வுகள் மற்றும் தேர்வு பயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து பழைய நினைவுகளில் மூழ்கி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, தங்களுக்கு வாழ்வளித்துக் கல்வி கற்பித்த ஆசிரியப் பெருமக்களை மேடையில் அமரவைத்து மலர் தூவி, பொன்னாடை அணிவித்துக் குரு வந்தனம் செலுத்திக் கௌரவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பைசல், நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஹுசைனா பர்வீன், மற்றும் ஆசிரியர்கள் அப்துல் ரகுமான், சேக், யாஸ்மின், ஹேமா, கயல், பர்வீன் சுல்தானா உள்ளிட்ட ஆசிரியர் பெருமக்கள் கலந்துகொண்டு முன்னாள் மாணவர்களின் பாசத்தையும் ஒற்றுமையையும் கண்டு நெகிழ்ந்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் பள்ளித் தோழமைகளைச் சந்தித்த முன்னாள் மாணவ – மாணவிகள் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டு இனிப்புகளைப் பரிமாறி விடைபெற்றனர்.
துணை ஆசிரியர் : நா.ராஜாமணி – 8973350663
