நம்ம ஊர் பெரிய ஆலமரத்துக் கிளையில் கம்பீரமாக அமர்ந்திருந்தது உள்ளூர் பருந்து. அப்போது மூச்சிரைக்கப் பறந்து வந்து அதன் அருகில் அமர்ந்தது ஊர்க்குருவி.
ஊர்க்குருவி: அண்ணே… பருந்து அண்ணே… ஒரு சூடான ‘மேட்டர்’ கிடைச்சிருக்குண்ணே! அப்படியே ‘கிரிஸ்பி’யான ஒரு நியூஸ்!
உள்ளூர் பருந்து: என்ன குருவி, இறக்கை எல்லாம் இவ்வளவு படபடக்குது? மேலிருந்து பார்த்த வரைக்கும் ஊர் அமைதியாகத்தானே இருக்கு. அங்க கீழே என்ன விசேஷம்?
ஊர்க்குருவி: வெளியில பார்க்கத்தான் அண்ணே அமைதி, ஆனா உள்ளுக்குள் பெரிய ‘அண்டர் கரண்ட்’ ஓடிக்கிட்டு இருக்கு. வழக்கமாக நம்ம குமரி மாவட்ட இஸ்லாமிய மக்கள் வசிக்கிற பகுதிகளில் ‘உதயசூரியன்’ தான் எப்பவும் ராஜாங்கம் பண்ணும். அது அவங்களோட பாரம்பரியக் கோட்டை. ஆனா, இந்தத் தடவை அங்க ‘விசில்’ சத்தம் ரொம்ப பலமாக கேட்க ஆரம்பிச்சிருக்குண்ணே!
உள்ளூர் பருந்து: (கூர்மையாகப் பார்த்து) என்ன சொல்ற குருவி? பாரம்பரியக் கோட்டையில விரிசலா? ஏன், என்ன ஆச்சாம்? மக்கள் ஏன் மாறுறாங்க?
ஊர்க்குருவி: எல்லாம் இந்த உள்ளூர் ‘உடன்பிறப்புகள்’ பண்ற அட்ராசிட்டிதான் அண்ணே காரணம். மக்களுக்கு ஒரு சின்ன வேலை ஆகணும்னாலும் இழுத்தடிக்கிறாங்களாம். கை நனைச்சாதான் காரியம் நடக்குது; இல்லைன்னா பஞ்சாயத்துதான் மிஞ்சுறதா மக்கள் புலம்புறாங்க. அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்வதுல கூட இவ்வளவு மெத்தனமாக இருந்தா நாங்க என்ன பண்றதுன்னு மக்கள் கேக்குறாங்கண்ணே.
உள்ளூர் பருந்து: ஓ… அப்போ அதிருப்தி அனல் பறக்குதுன்னு சொல்லு. அதுக்காகப் புதுக் கட்சிக்கு ஓட்டுப் போடுற அளவுக்கு துணிஞ்சிட்டாங்களா?
ஊர்க்குருவி: ஆமாண்ணே! “இத்தனை காலமா இவங்களுக்குத்தானே ஓட்டுப் போட்டோம்… இந்த முறை ஏன் அந்தப் புதுப் பையன் (விசில் சின்னம்) கட்சிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கக் கூடாது?”ன்னு தெருவுக்குத் தெரு பேசிக்கிறாங்க. பாரம்பரியத்தை விட, தங்களுக்குத் தேவையானதை நேர்மையாகச் செய்து தர்ற ஆளுதான் முக்கியம்னு மக்கள் முடிவெடுத்துட்டாங்க போல!
உள்ளூர் பருந்து: இது பெரிய அரசியல் மாற்றத்துக்கான அறிகுறி குருவி. கோட்டைக்குள்ள கொடி பறக்குமா இல்ல விசில் சத்தம் காதைக் கிழிக்குமான்னு தெரியலையே.
ஊர்க்குருவி: அதானேண்ணே… பாரம்பரிய அறுவடை தடையாம நடக்குமா இல்ல புது வரத்து வந்து பதம் பார்க்குமான்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும். நான் போய் அடுத்த வார்ட்ல என்ன நடக்குதுன்னு எட்டிப் பார்த்துட்டு வர்றேன் அண்ணே!
