உடுமலை, அக்டோபர் 12-
உடுமலை அருகே மருள்பட்டியில் ரேக்ளா பந்தயத்திற்கு பயன்படும் காங்கேயம் இன காளை தமிழகத்திலேயே அதிகபட்சமாக ரூ 30 லட்சத்துக்கு விற்பனை ஆகி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள் ரேக்ளா பந்தயத்திற்காக அதிக அளவு காங்கேயம் இன காளைகள் வளர்த்து வருகின்றனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அதிக அளவு ரேக்ளா பந்தயங்களில் இந்த காளைகள் பங்கேற்கின்றன.
உடுமலை அருகே உள்ள மருள் பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஹரி வீரராகவன் காளைகள் வளர்த்து ரேக்ளா பந்தயத்தில் பங்கேற்று வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் பொள்ளாச்சி நெகமம் செட்டிக்கா பாளையத்தில் நடந்த ரேக்ளா பந்தயத்தில் குறைந்த நேரத்தில் இலக்கை கடந்து முதல் பரிசு வென்ற காங்கேயம் இனத்தைச் சேர்ந்த மயிலை காளை உச்சவிளையாக ரூ 30 லட்சத்து 2ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரேக்ளா பந்தய காளை ஒன்று அதிகபட்சமாக ரூ 22 லட்சத்துக்கு விற்பனையான நிலையில் தற்போது உடுமலையில் காளை அதிக விலைக்கு விற்பனையானது.
நெகமம் செட்டிக்கா பாளையத்தை சேர்ந்த விவசாயி ராஜா இந்தக் காளையை வாங்கி உள்ளார்.
ரேக்ளா வரலாற்றில் அதிக விலைக்கு உடுமலை காளை விற்பனையாகி உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வீரராகவன் கூறியதாவது:
நாட்டு மாடுகளை காக்க வேண்டும் என்ற நோக்கில் காங்கேயம் இன காளைகள் மாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறோம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரேக்ளா பந்தயங்கள் நடக்கிறது.
சில நாட்களுக்கு முன் நெகமம் செட்டிக்கா பாளையம் பகுதியில் நடந்த மாநில அளவிலான ரேக்ளா பந்தயத்தில் மயிலை காளை 200 மீட்டர் பந்தய தூரத்தை 16. 125 வினாடிகளில் கடந்து அபார வெற்றி பெற்று முதல் பரிசை பெற்று தந்தது.

இதனால் இந்த காளை அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது மூன்று வயதான காளை 4 பல் பிரிவில் 25க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பெற்று ஸ்கூட்டர் ,பைக், போன்ற பரிசுகளை பெற்று தந்தது இவ்வாறு கூறினார்.
