திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியிலிருந்து 5 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து மேல்மலை கிராமமான போலூர் கிராமத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு தங்கும் விடுதி தேடியதாக கூறப்படுகிறது. கேரளா சுற்றுலா பயணிகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள வருவாய் நிலத்திற்கு சென்று புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, ஆனைமலை புலிகள் வனப்பகுதிக்கு உட்பட்ட வனப்பகுதியில் பணியாற்றும் வனத்துறையினர் 2 பேர் நீங்கள் வனப்பகுதிக்குள் சென்று உள்ளீர்கள் எனவே 25 ஆயிரம் அபராதம் பிடிக்கப்படும் என்று சுற்றுலா பயணிகளிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகளுக்கும் வனத்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வனத்துறையினர் 5 கேரள மாநில சுற்றுலா பயணிகளை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தனி அறையில் பூட்டி பணம் கேட்டு அடித்ததாகவும், வாகனத்தில் இருந்த ரூ.9,500 பணம் மற்றும் செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டு இனிமேல் வனப்பகுதிக்கு அருகாமையில் உள்ள இடங்களுக்கு வரக்கூடாது என எச்சரித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை போலீசாரின் நடவடிக்கை குறித்து சுற்றுலா பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்
