பழனி : ஜூலை 01 : திண்டுக்கல் மாவட்டம் பழனி கச்சேரி புதுதெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கூனக்காளியம்மன் கோவில் திருவிழா தற்பொழுது வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இத்திருவிழாவின் இரண்டாம் நாள் விழாவின் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படும் முளைப்பாரி ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கோவில் வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை, பழனி சித்தநாதன் & சன்ஸ் உரிமையாளர் திரு. பழனிவேல் அவர்கள் முறைப்படி தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் பக்திப் பெருக்குடன் முளைப்பாரிகளை ஏந்திச் சென்றனர். மேள தாளங்கள் மற்றும் இன்னிசை முழங்க, அதிரடி வானவேடிக்கைகளுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த இந்த ஊர்வலம், இறுதியாக மீண்டும் கோவில் வளாகத்தை வந்தடைந்தது.

இந்தக் கண்கவர் முளைப்பாரி ஊர்வலத்தில் பக்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் திரளாகக் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அருள்மிகு கூனக்காளியம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
பழனி செய்தியாளர் : நா.ராஜாமணி. : 8973350663
