தென்காசி, மார்ச் – 02
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை அரை மணி நேரத்தில் இறந்தது இதனால் குழந்தையின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மருத்துவமனை கண்காணிப்பாளர் இரா.ஜெஸ்லின் விளக்கம் அளித்துள்ளார்.
தென்காசி மாவட்டம், பாட்டப்பத்து ஊராட்சிக்கு உட்பட்ட துவரன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் என்பவரது மகன் வசந்தகுமார்
(வயது 35) இவர் மேளம் அடிக்கும் தொழில் செய்து வருகிறார்.இவரது மனைவி பாரதி (வயது 30) இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.இதில் இரண்டாவது பெண் குழந்தைக்கு ஒன்றரை வயது முடிந்துள்ளது.
இந்நிலையில் அந்த ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது அந்த குழந்தையை பரிசோதித்த டாக்டர் காய்ச்சல் அதிகமாக இருந்ததால் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக அரை மணி நேரத்தில் அந்த குழந்தை இறந்துவிட்டது.
இதை அறிந்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஆத்திரம் அடைந்ததோடு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் உறவினர்களை அமைதிப்படுத்தினர்.
இது பற்றி தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் இரா.ஜெஸ்லின்
விளக்கம் அளித்துள்ளார். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று இரவு சேர்க்கப்பட்ட ஒன்றரை வயது பெண் குழந்தை அரை மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தது. இறந்துவிட்ட அந்தப் பெண் குழந்தைக்கு ஒன்றரை வயது நிறைவு பெற்றுள்ள நிலையில் அந்த குழந்தைக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சுந்தரபாண்டியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பு ஊசி போட்டு உள்ளார்கள்.
இதனால் அந்த குழந்தைக்கு
காய்ச்சல் வந்துள்ளது . மூன்று தினங்களாக குழந்தைக்கு காய்ச்சல் இருந்த நிலையில், குழந்தையின் பெற்றோர் ஒரு சில சிகிச்சையை செய்துள்ளனர் .எனினும் காய்ச்சல் சரி ஆகாத நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் தென்காசியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றபோது, குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தையின் நிலைமை மிக மோசமாக உள்ளது.
மூளைக்காய்ச்சலுக்கு உண்டான அறிகுறி உள்ளது. உடனடியாக நீங்கள் அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என கூறி, அவரே அரசு மருத்துவமனைக்கும் ஒரு குழந்தை தீவிர பாதிப்புடன் வருகிறது, குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை தேவை, அதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்யுங்கள் என தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தகவல் கொடுத்துள்ளார் .
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை குழந்தைகள்நலப் பிரிவில் மருத்துவர்களும் செவிலியர்களும், அவசர சிசைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தயார் நிலையில் இருந்து உள்ளனர்.
குழந்தை சரியாக 8.27 மணிக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டவுடன் ,மருத்துவர்கள் குழு சிகிச்சையை வேகமாக தொடங்கியுள்ளனர் . அனைத்து உயர்தர சிச்சையை செய்த போதிலும் குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் 8.55 மணிக்கு உயிரிழந்துள்ளது.. ஆகவே அரசு மருத்துவமனை மீது எந்த தவறும் இல்லை குழந்தைக்கு எந்த அளவு உரிய சிகிச்சை அளிக்க முடியுமோ அந்த அளவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது எனினும் துரதிஷ்டவசமாக சிகிச்சை பலனளிக்காமல் அந்த குழந்தை உயிரிழந்துள்ளது, வருத்தத்துக்குரியது என அரசு தலைமை மருத்துவமனை சார்பில் விளக்கம் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குழந்தையின் உடலை பெற்றுக்கொண்டு தங்களின் இல்லத்திற்கு எடுத்துச் சென்று இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர் இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.