திருநெல்வேலி, செப். 23:-
திருநெல்வேலி மாவட்டத்தில், சாதிய ரீதியிலான பிரச்சனைகளைக் கட்டுக்குள் கொண்டுவர, மாவட்டக் காவல்துறையின் சார்பில், பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன.
பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவியர்களிடையே, இது சம்பந்தமாக விழிப்புணர்வு சந்திப்புகள், அடிக்கடி நடத்தப்பட்டும் வருகின்றன.சாதிய ரீதியான மோதல்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும், நபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து, அவர்களிடம் எடுத்துரைத்து, எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, படிப்பில் கவனம் செலுத்தி, குற்ற செயல்கள் மற்றும் சாதிய மோதல்களைத் தவிர்த்து, நல்வழியில் செயல்பட அவ்வப்போது, ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வரப்படுகின்றன.
மேலும்,பள்ளி செல்லும் மாணவர்கள், சாதிய அடையாளங்களை தங்களது கைகளிலும், நெற்றியிலும் கயிறு மற்றும் பொட்டாக அடையாளப்படுத்திடும் செயல்பாடுகளும், நடைமுறையில் மாற்றப்பட்டுள்ளன. மாணவச் செல்வங்களை நல்வழிப்படுத்திடும் விதமாக, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும், மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் உத்தரவின் பேரில், திருநெல்வேலி மாவட்டத்தில், பொது இடங்களில் சாதிய அடையாளங்களை அகற்றும் பணிகளில், சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன.
மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும், மின்கம்பங்கள், பேருந்து நிறுத்தங்கள்,
பாலங்கள், குறுக்குப் பாலங்கள், கிராமங்களுக்குள் நுழையும் இடங்கள், வெளியேறும் இடங்கள் ஆகியவற்றில் உள்ள பலகைகள், பொதுச் சுவர்கள், குடிநீர்த்தொட்டிகள் போன்ற இடங்களில் உள்ள,
சாதிய வர்ண அடையாளங்கள், மாதந்தோறும் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றை உடனடியாக அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் தீவிர நடவடிக்கைகளினால், இதுவரை இம்மாவட்டத்தில் உள்ள 313 கிராமங்களில், மொத்தம் 2 ஆயிரத்து 115 இடங்களில் உள்ள, சாதிய அடையாளங்கள் வருவாய் துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களின், பரிபூரண ஒத்துழைப்புடன் அகற்றப்பட்டு வருகின்றன.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் மேலப்பாளையம் ஹஸன்.***
