வாணியம்பாடி அருகே முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து. இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழப்பு. விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர்.
வாணியம்பாடி,மார்ச்.10- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திருமாஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது55) இவர் சவுண்ட் சர்வீஸ் மற்றும் பந்தல் அமைக்கும் தொழில் செய்து வருகிறார்.
இவரது நண்பர் கலந்திரா அடுத்த குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 35). இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை சின்னத்தம்பி மற்றும் ராமன் ஆகிய இருவரும் பந்தல் அமைப்பதற்காக
வாணியம்பாடியில் இருந்து நாட்றம்பள்ளி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது நெக்குந்தி பகுதி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது சென்று கொண்டு இருந்த போது சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி அதிவேகமாக சென்ற கார் இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது.
இதில் இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டு அதனை ஒட்டி சென்ற ராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சின்ன தம்பி படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அப்பகுதி மக்கள் சின்னத் தம்பியை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அப்போது செல்லும் வழியிலேயே சின்னத்தம்பியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இரு சக்கர வாகனத்தின் மீது விபத்து ஏற்படுத்திய கார் அங்கு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டது.
உடனடியாக அங்கு வந்த தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் போக்குவரத்து பாதிக்காமல் இருக்க விபத்துக்குள்ளான இருசக்கர வாகனத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கிராமிய போலீசார் இருவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற கார் குறித்து சுங்க சாவடியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.
நிருபர்
அப்சர் மறவன்
திருப்பத்தூர் மாவட்டம்
