தென்காசி, செப் – 2 1 –
குற்றாலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசின் வாக்குத் திருட்டையும், இதில் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக வாக்கு திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் குற்றாலம் தெஷ்ண மாற நாடார் சங்கத்தில் வைத்து மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் ராம் மோகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும், நெல்லை பாராளுமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு மாநிலச் செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ரவி அருணன், முன்னாள் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் எஸ் கே டி பி காமராஜ், கொடிக்குறிச்சி முத்தையா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர் எஸ் கே டி பி காமராஜ் வரவேற்புரை ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் பேசியதாவது:-
ஒன்றிய அரசும் தேர்தல் ஆணையமும் கூட்டணி சேர்ந்து நடத்தி கொண்டிருக்கின்ற வாக்கு திருட்டை ஆதாரப்பூர்வமாக இன்னும் சொல்லப்போனால் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின் அடிப்படையில் விஞ்ஞானபூர்வமாகவும் மிகத் தெளிவாக ஆராய்ந்து தேர்தல் ஆணையத்தின் பொய்களை புரட்டுகளை ஜனநாயக விரோத செயல்களை நமது தலைவர் ராகுல்காந்தி அம்பலப்படுத்தி வருகிறார்.
ஒன்றிய அரசும் தேர்தல் ஆணையமும் இணைந்து பீகாரில் 65 லட்சம் வாக்குகளை திருடி உள்ளது. அதைப் போலவே கர்நாடகாவிலும் மகாராஷ்டிராவிலும் வாக்குத்திருட்டு மூலம் மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது.
ஒன்றிய அரசின் வாக்குத்திருட்டை அம்பலப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் காங்கிரஸ் கட்சியின் மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
அதன்படி நெல்லையிலும் சிறப்பான மாநாட்டை நடத்தி இருக்கிறோம்.
இந்த மாநாடு வெற்றி பெற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒன்றிய அரசின் வாக்குத்திருட்டை கண்டித்து நாடு முழுவதும் ஒன்றிய அரசுக்கு எதிராக 1 கோடி மக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று நெல்லையிலும் இன்று தென்காசி மாவட்டத்திலும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து இருந்து வருகிறது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் இந்த கூட்டணி அமோக வெற்றி பெறும். திமுக காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் எந்தெந்த தொகுதிகள் என்பதை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமையும், மாநில தலைமையும் முடிவு செய்யும்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பது உறுதி இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர பாண்டியன், துரை, குமாரராஜா, தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் ரமேஷ் குமார், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெபன் செல்ல புருஸ், மோகன் அருணாச்சலம், வழக்கறிஞர் முருகன், காவல் முஸ்தபா, வட்டாரத் தலைவர் கார்வின், கடையம் வட்டார மகளிர் காங்கிரஸ் தலைவி சீதாலட்சுமி, சேர்மக்கனி, கிளங்காடு மணி, உமா சங்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
