திருநெல்வேலி,நவ.6:-
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று (நவம்பர். 6) காலையில் 2025-26 நிதியாண்டிற்கான, சென்ற மாதம் (அக்டோபர்) வரையிலான, திருநெல்வேலி கோட்ட அளவிலான, வணிகவரித்துறை அலுவலர்களின், பணித்திறனாய்வு கூட்டம், தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்தறை அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில், வணிகவரித்துறை ஆணையர் எஸ். நாகராஜன் முன்னிலையில், நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது :- “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பு ஏற்றது முதல், வணிகவரித்துறையின் சேவைகள், அனைவருக்கும் எளிதாக கிடைத்திடும் வகையில், பல்வேறு சீர்திருத்தங்களை, தமிழக வணிகவரித்துறை செய்து வருகிறது.
இந்த துறைக்கு, கூடுதல் வருவாய் கிடைத்திடும் வகையில் பலவேறு ஆலோசனையும், முதலமைச்சர் அவ்வப்போது வழங்கி வருகிறார். அரசுக்கான நிதி ஆதாரமாக, வணிகவரித்துறையும், பத்திரத்துறையும் விளங்கி வருகிறது.
மாநிலத்தில் உள்ள அனைத்து வணிகவரி கோட்டங்களுக்கும், தொடர்ச்சியாக பணித்திறனாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் தான், இன்று (நவம்பர். 6) திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமாரி ஆகிய நான்கு மாவட்டங்களையும் உள்ளடக்கியுள்ள, திருநெல்வேலி கோட்ட அளவிலான கூட்டம், நெல்லையில் நடத்தப்பட்டுள்ளது.
மாறுதலுக்கு உட்பட்டுள்ள, ஒன்றிய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி, ஏற்றுமதி-இறக்குமதி வரி உள்ளிட்ட அனைத்து இனங்களிலும், இப்போது நிலவி வரும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு, மாநில அரசின் வருவாயினை உயர்த்திட தேவையான நடவடிக்கைகளில், அலுவலர்கள் முனைப்புடன், ஈடுபட வேண்டும்!’
இவ்வாறு, அமைச்சர் மூர்த்தி, பேசினார். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா. சுகன்யா, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, கூடுதல் ஆணையர்கள் சுபாஷ் சந்திர போஸ், பரமேசுவரன், வணிகவரித்துறை இணை ஆணையர் முருக குமார் மற்றும் பானு பிரியா உட்பட, பலர் பங்கேற்றிருந்தனர்.திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் மேலப்பாளையம் ஹஸன்.
