திருநெல்வேலி,ஜன.29:-நெல்லை மாநகராட்சி மற்றும் தமிழக அரசு உணவு பாதுகாப்பு துறை, திருநெல்வேலி பிரிவு ஆகியன இணைந்து, இன்று [ஜன.2] காலையில், சாலையோர உணவு வணிகர்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் உணவு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி, கலப்படத்தை கண்டறியும் முறைகள், செறிவூட்டப்பட்ட உணவு, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் ஆகியவை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, நெல்லை கொக்கிர குளம் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து, நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், சாலையோர உணவு விற்பனையாளர்கள் 121 நபர்களுக்கு, கட்டணமில்லா மருத்துவ முகாம் நிகழ்ந்தது. இதில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, உடல் எடை அளவு மற்றும் ரத்த அழுத்தம் தொடர்பான பரிசோதனை ஆகியவை நடைபெற்றன.
மருத்துவ முகாமினை தொடர்ந்து சாலையோர வியாபாரிகள், பாதுகாப்பான உணவினை எப்படி கையாள்வது? தனிநபர் சுகாதாரம் எவ்வாறு பேணுவது? கலப்படத்தை எம்முறையில் கண்டறிவது? என்பன பற்றி, விளக்கப்பட்டன. இவை தவிர, செறிவூட்டப்பட்ட உணவினை உட்கொள்வதினால் ஏற்படும் நன்மைகள், சமையல் எண்ணெயினை அடிக்கடி சூடு படுத்தி உண்பதினால் ஏற்படும் உடல் உபாதைகள் போன்றவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முகாமினை, நெல்லை மாநகராட்சியில், மாநகர நல அலுவலர் பொறுப்பு வகிக்கும் டாக்டர் ராணி, உணவு பாதுகாப்பு பிரிவு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சசி தீபா ஆகியோர், நெறிப்படுத்தினர்.
உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரநாராயணன் மற்றும் பயிற்சி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பிர்தவுஸ் பேகம், சிவசுப்பிரமணியன், அருண், அக்சயா ஆகியோரும், இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தனர்.
முகாம் நிறைவில், “பாதுகாப்பான முறையில், பொது மக்களுக்கு உணவினை வழங்குவோம்!”- என்று, சாலையோர உணவு வணிகர்கள், “உறுதிமொழி” எடுத்துக் கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.