72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா 14.11.2025 முதல் நீலகிரி மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வார விழாவின் ஐந்தாம் நாளான இன்று 18.11.2025 செவ்வாய்க்கிழமை “கூட்டுறவு தொழில் முனைவு மூலம் இளைஞர்கள் பெண்கள் மற்றும் பலவீனமான துறைகளை மேம்படுத்துதல்” என்ற மையக்கருத்தின் அடிப்படையில், மசினகுடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், நீலகிரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் மற்றும் நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் மசினகுடி கிராமத்தில் சரக துணைப்பதிவாளர் திரு. அஜீத்குமார் தலைமையில் நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் திரு. சி. அய்யனார் அவர்கள் முன்னிலையில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைப்பெற்றது.

இந்த முகாமில் ஆவின் கால்நடை மருத்துவர்கள் திரு. செல்வகணபதி, டேவிட் மோகன் ஆகியோரது குழுவினர்களால் கால்நடைகளுக்கு பூச்சி மருந்து, குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், மலட்டுத்தன்மை நீக்குதல் போன்ற சிகிச்சைகள் 50க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு அளிக்கப்பட்டது. மேலும் இம்முகாமில் கால் நடைகளுக்கு இலவசமாக தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டது. சிறந்த கால்நடைகள் மற்றும் கால்நடை பராமரிப்பாளர்களுக்கும், சங்கத்திற்க்கு அதிகப்படியாக பால் வழங்கிய உறுப்பினர்களுக்கும் சிறப்பு பரிசுகளும் வருகை தந்த பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்க பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்த முகாமில் ஆவின் பொது மேலாளர் திரு. ராஜேஷ் குமார், நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் திரு. கௌரிசங்கர் கூட்டுறவு சார்பதிவாளர்கள் திரு. கார்த்திகேயன், திரு. கோவிந்தராஜ், திரு. ஆனந்த் (பால்வளம்), முதுநிலை ஆய்வாளர் திரு. சுந்தர நடராஜன் மசனகுடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர் திரு. ஜெயபிரகாஷ் கூட்டுறவு துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், சங்க உறுப்பினர்கள், கூட்டுறவாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
