கன்னியாகுமரி, பிப் : 14
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கட்டையன்விளை பகுதியில் குப்பைகள் சேகரித்து யாசகம் செய்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை ‘நிமிர்’ மீட்புக் குழுவுடன் இணைந்து நாம் ஒருவர் அறக்கட்டளை மற்றும் அவர் பவுண்டேஷன் பாதுகாப்பாக மீட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.

பல ஆண்டுகளாக குமரி மாவட்டம் முழுவதும் சுற்றித் திரிந்த இவர், குப்பைகளை மூட்டை மூட்டையாக சேகரித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதில் ₹10, ₹50, ₹100 நோட்டுகள் மற்றும் அதிகளவிலான சில்லறை பணமும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில், ‘நிமிர்’ மீட்புக் குழுவைச் சேர்ந்த காவலர்கள் ஜெயந்தி மற்றும் சுமதி சம்பவ இடத்துக்கு சென்று அவரை மீட்டனர்.
மீட்கப்பட்ட நபர் இந்தியில் பேசியதுடன், தனது பெயர் தஸ்லீம் என்றும், சொந்த ஊர் அசாம் மாநிலம் குவஹாத்தி என்றும் தெரிவித்தார். இதையடுத்து அவர் உரிய பாதுகாப்புடன் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார்.
மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
