நடிகர் முத்துக்காளை தமிழ் நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு மூலமாக B.A., M.A., B.Lit. ஆகிய மூன்று பட்டப் படிப்புகளை ஏற்கெனவே படித்துப் பட்டம் பெற்றிருந்தார். அடிப்படையில் எட்டாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த அவர், அப்போதிருந்த பல்கலைக்கழக விதிகளின்படி நுழைவுத் தேர்வு எழுதி பட்டப் படிப்புகளை முடித்திருந்தார்.
இருப்பினும், அதற்குமேல் உயர்கல்வி பயில ஆசைப்பட்ட அவருக்கு ஒரு புதிய தடை ஏற்பட்டது. முறைசார் கல்வி மூலம் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் மட்டுமே மேற்கொண்டு படிக்க முடியும் என விதிகள் மாற்றப்பட்டன. இதனால் தனது மேற்படிப்புக்கு ஏற்பட்ட தடையை உடைக்கத் தீர்மானித்த முத்துக்காளை, கடந்த மூன்று வருடங்களாக முயற்சி செய்து 10, 11 மற்றும் சமீபத்தில் வெளியான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளிலும் எழுதித் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.
சமீபத்தில் தனது மனைவியை இழந்து சோகமான சூழலில் இருக்கும் இந்தத் தருணத்திலும், கல்வியின் மீதுள்ள தீராத ஆர்வத்தால் வரும் திங்கள்கிழமை முதல் தனது அடுத்த பட்டப் படிப்பை நோக்கிப் பயணிக்க உள்ளதாக நடிகர் முத்துக்காளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
