திருநெல்வேலி,ஜன.13:-
நெல்லை,தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 தென் மாவட்டங்களை உள்ளடக்கியுள்ள, “திருநெல்வேலி சரக காவல் துறை துணைத்தலைவர்” ( DIG OF POLICE, TIRUNELVELI RSNGE) ப. சரவணன் உத்தரவுப்படி, திருநெல்வேலி சரகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களிலும், பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களின் அருகில் உள்ள 476 கடைகளில், திங்கள் கிழமை {ஜனவரி.12}காலையில் ஒரே நேரத்தில், அதிரடியாக காவல்துறையினர் போதைப் பொருள்கள் தொடர்பாக, தீவிர சோதனைகளை நடத்தினர்.

இந்த அதிரடி சோதனையின் போது, தடை செய்யப்பட்ட புகையிலை, சுமார் 31 கிலோ கைப்பற்றப்பட்டது.
நான்கு மாவட்டங்களிலும் சேர்த்து, மொத்தம் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட புகையிலையினை விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைக்கவும், சம்பந்தப்பட்ட துறையினர் மூலம், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது பற்றி, போலீஸ் டி.ஐ.ஜி.சரவணன், இன்று (ஜனவரி.13) கூறியதாவது:-
“சமுதாயத்தில், இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தினை அஸ்தமனம் ஆக்கும், இது போன்ற தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! புகையிலை மற்றும் கஞ்சா பயன்பாட்டினை தடுக்கும் பணியில், காவல்துறையினர் முடிக்கி விடப்பட்டுள்ளனர்.
முதன் முறையாக புகையிலை விற்பவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்போது, அவர்களுக்கு ஓராண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
அது போல 2-வது மற்றும் தொடர்ச்சியான சமயங்களில், இதே குற்றத்தில் ஈடுபட்டால், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், தண்டனையாக விதிக்கப்படுகிறது.
சமுதாயத்திற்கு பெரிய கேடாக அமையும், புகையிலை பயன்பாட்டினை தடுப்பதற்கு, பொதுமக்களும் காவல்துறையினருடன் ஒத்துழைக்க வேண்டும்.
புகையிலை பயன்பாடு சம்பந்தமாக, தங்களுக்கு தகவல் கிடைக்கும் போது, தமிழக அரசின் கட்டணமில்லா “DRUG FREE TAMILNADU” என்னும் செயலியை பயன்படுத்தி, தகவல்களை தெரிவிக்க, ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.
இந்த செயலியில், தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் பதிவிடப்படாமலே, தங்களது தகவலை தெரிவிக்க- பகிர்ந்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன!” இவ்வாறு, போலீஸ் டி.ஐ.ஜி. சரவணன், தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: “மேலப்பாளையம்” ஹஸன்.
