திருநெல்வேலி, ஜூன்.16:-
இலங்கையைசேர்ந்த தமிழ் எழுத்தாளர் கவிஞர் ராணிஸ்ரீதரன். இவர், மாணவர்களுக்கான சிலப்பதிகாரம் உள்பட பல நூல்களை, எழுதியுள்ளார். தற்போது தமிழ்நாட்டில், இலக்கிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இவர், திருநெல்வேலிக்கு வருகை தந்தார்.
திருநெல்வேலி வருகை தந்த அவரை, நெல்லை இலக்கியவாதிகள் அன்புடன் வரவேற்று, திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியிலுள்ள, அரசு பொது நூலகத்தில், தாமிரபரணி வாசகர் வட்டத்தின் சார்பிலான, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க செய்தனர்.
நிகழ்ச்சிக்கு, “நெல்லை டைம்ஸ்” நாளிதழ் ஆசிரியரும், தேசிய வாசிப்பு இயக்கத் தலைவருமான சு.தம்பான் தலைமை வகித்தார். பாரதியார் உலகப் பொதுச் சேவை நிதியச் செயலாளர் முனைவர் கோ.கணபதி சுப்பிரமணியன், கலை பதிப்பக ஆசிரியர் கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்டத் தலைவர் முனைவர் சரவணக்குமார், அனைவரையும் வரவேற்றுப் பேசினார். வரவேற்புரையை தொடர்ந்து, இலங்கை தமிழ் எழுத்தாளர் ராணி ஸ்ரீதரன் பேசினார். அவர் தம்முடைய உரையில், இலங்கை தமிழ் எழுத்து உலகம் எவ்வாறு உள்ளது? சந்திக்கும் சிரமங்கள் என்னென்ன? சிறப்புகள் என்னென்ன? என்பவை குறித்து, விரிவாக உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில், கவிஞர் முத்துசாமி, “நிழல்” இலக்கியத் தளம் பிரபு, மேனாள் துணை ஆட்சியர் தியாகராஜன், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மாணிக்க வாசகம்,சமூக ஆர்வலர் சுரேஷ் அஸ்வின், கவிஞர் சுப்பையா, ஓவியர் சந்தானம் உட்பட, தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு, பயன் பெற்றனர். நிறைவாக, அரசு பொது நூலகத்தின் நூலகர் அகிலன் முத்துக்குமார், அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளி ஓவியஆசிரியர் மு. சொக்கலிங்கம், மிகச்சிறப்பாக சிறப்பாக செய்திருந்தார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
