பட்டா மாறுதலுக்காக 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, கையும்-களவுமாக பிடிபட்டார்!
திருநெல்வேலி, செப்.23:-
நிலம் பட்டா மாறுதலுக்காக, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி (V.A.O) கைது செய்யப்பட்டார்.
அது பற்றிய விபரம் வருமாறு:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மனைவி விஜயா. பாஸ்கரின் தந்தை அய்யங்கண்ணு என்பவருக்கு சொந்தமான நிலத்தை, தன்னுடைய கணவர் பாஸ்கர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக, விஜயா விண்ணப்பித்து இருந்தார்.
இந்த பட்டா பெயர் மாற்றத்திற்கு, கூடங்குளம் கிராம நிர்வாக அலுவலர் ஸ்டாலின் ஜெயசீலன் (வயது. 44) என்பவர், விஜயாவிடம் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். பின்னர், 5 ஆயிரம் ரூபாயினை குறைத்துக் கொண்டு, 25 ஆயிரம் ரூபாயாவது கண்டிப்பாக தரவேண்டும்! என்று கூறினார்.
லஞ்சம் தர விரும்பாத விஜயா, இது குறித்து திருநெல்வேலியில் உள்ள, லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மெஸ்கலரின் எஸ்கால் அலுவலகத்தில், எழுத்து மூலம் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து, கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், நேற்று (செப்டம்பர். 22) கூடங்குளம் வி.ஏ.ஓ. அலுவலகத்தில் காத்திருந்தனர்.
அப்போது, விஜயா கொடுத்த, 25 ஆயிரம் ரூபாயினை வாங்கிய, வி.ஏ.ஓ. கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். கைதான வி.ஏ.ஓ. ஸ்டாலின் ஜெயசீலன், கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் கூடங்குளத்தில், கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
கூடங்குளத்தில் அவர் வசிக்கும் வீட்டிலும், லஞ்ச ஒழிபபு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால், கூடங்குளம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில், மிகுந்த பரபரப்பு நிலவியது.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் மேலப்பாளையம் ஹஸன்.
