கன்னியாகுமரி, மார்ச் 7:
கன்னியாகுமரி மாவட்டம் கடையல் மேலே முக்கு பகுதியில் கோழிக் கழிவுகளை ஏற்றி வந்த டெம்போ ஒன்றை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாகச் சிறைபிடித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
அதிகாரிகளைக் கண்டதும் வாகன ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
சிறைபிடிக்கப்பட்ட இந்தக் கோழிக் கழிவுகள், ஆலஞ்சோலை பகுதியில் எவ்வித அனுமதியுமின்றி சட்டவிரோதமாக இயங்கி வரும் பன்றிப் பண்ணை ஒன்றிற்கு கொண்டு செல்ல முயன்றபோது அதிகாரிகளால் பிடிபட்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் கடையல் பேரூராட்சித் தலைவர், கடையல் காவல்துறையினர் மற்றும் மார்த்தாண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தை கடையல் காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாகப் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கோழிக் கழிவுகளால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுக்கும் வகையில், கடையல் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி அந்த கழிவுகளைப் பாதுகாப்பாகப் புதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன் பாவலர் ரியாஸ்
