கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த அமெரிக்க வாழ் இந்தியர்களான கேரளாவைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் வாவத்துறை கடலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட சகோதரிகள் ஆனி பிலிப் (35), மீரா பிலிப் (32). அமெரிக்காவில் வசித்து வந்த இவர்கள், சமீபத்தில் கேரளா வந்திருந்தனர்.
பின்னர், மதுரை மற்றும் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு கடந்த ஏப்ரல் 24-ம் தேதி கன்னியாகுமரிக்கு வந்து தனியார் விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர்.
கடந்த 26-ம் தேதி விடுதியில் இருந்து வெளியேறிய இருவரும் மீண்டும் அறைக்கு திரும்பவில்லை. இதற்கிடையே, அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்குத் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கன்னியாகுமரி விரைந்து வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில், காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சகோதரிகள் இருவரும் வாவத்துறை தூண்டில் வளைவு பகுதியை நோக்கி நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
இந்த நிலையில், கடலில் இரு சடலங்கள் மிதப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், கடலோர காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டனர். உயிரிழந்த இளம்பெண்களின் சித்தப்பா சுஜி உடல்களை அடையாளம் கண்டு உறுதி செய்தார்.
பின்னர் இருவரின் சடலங்களும் உடற்கூராய்வுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
தற்கொலைக்கான காரணம் குறித்து கன்னியாகுமரி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி : செய்லிஸ் (கன்னியாகுமரி சிறப்பு நிருபர்)
