செப் 13, கன்னியாகுமரி –
“நீயே உன்னால் உனக்காக” அறக்கட்டளையின் தவப்புதல்வி அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் மருதம் அறக்கட்டளையின் நிறுவனர் ராபர்ட், நாஞ்சில் கலையக நிறுவனர் சீத்தாராமன் மற்றும் மலர் குழுவின் மாவட்டச் செயலாளர் ஜினோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
சமூக சேவகி ஈஸ்வரி மற்றும் அறக்கட்டளையின் அறங்காவலர் சுசிலா ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர்.
நிகழ்வை வழங்கறிஞர் சுதர்மன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந்த விழாவில், கிராமப்புறப் பெண்களுக்கான சுயநிறைவு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட புதிய திட்டத்தை தவப்புதல்வி அமைப்பு அறிவித்தது.
கடந்த ஆண்டு 20 நாட்களில் 2024 வண்ண மேலங்கிகள் தயாரித்து சாதனை படைத்த முயற்சியைத் தொடர்ந்து, இம்முறை மலர் அறக்கட்டளை மற்றும் மருதம் அறக்கட்டளையுடன் இணைந்து, சுயஉதவி குழுக்களின் பெண்களுக்கு தொழில் முனைவு பயிற்சி அளித்து, அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
மேலும், இந்நிகழ்வில் குமரியில் தனது அபார திறமைகளால் சிறுவயதிலிருந்தே பல்வேறு விருதுகளை வென்ற சிறுமி லட்சராவிற்கு “குமரியின் இளம் பக்தி இசை வாணி” விருது தவப்புதல்வி அமைப்பின் தலைவர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை அவர்களால் வழங்கப்பட்டது.
நிகழ்வை சூரியன் பண்பலை மூத்த அறிவுப்பாளர் விஜி பூரண்சிங் அவர்கள் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினார். விழாவில் கவிதாயினி குமரி உத்ரா, வழக்கறிஞர் வைரமுத்து, மருதம் மூத்த நிர்வாகி நடராஜன், சந்திப்பு பத்திரிகை ஆசிரியர் இசக்கிமுத்து, லிம்கா சாதனையாளர் மதி, நாஞ்சில் தலைவர் ஈஸ்வரன், பொருளாளர் மது, மலர் குழு உறுப்பினர்கள் மற்றும் தவப்புதல்வி பெண்கள் குழுவின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.
