திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் வுஷூ வீராங்கனை ரேஷ்மி எஸ்., ஜார்ஜியா நாட்டின் படுமி (Batumi) நகரில் நடைபெற்ற Batumi Open International Wushu Tournament சர்வதேச வுஷூ போட்டியில் பங்கேற்று இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று திண்டுக்கல் மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட வுஷூ சங்கத்தின் கீழ் செயல்படும் திண்டுக்கல் குங்ஃபூ பள்ளி மாணவியான ரேஷ்மி, Cadets (12–14) Female – Long Weapons பிரிவில் பங்கேற்றார்.
இதில் Jianshu பிரிவில் 8.37 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கமும், Qiangshu பிரிவில் 8.43 புள்ளிகள் பெற்று மற்றொரு தங்கப் பதக்கமும் வென்றார்.
சர்வதேச அளவிலான வுஷூ போட்டியில் பங்கேற்று இரட்டை தங்கம் வென்றதன் மூலம், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து சர்வதேச வுஷூ போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சாதனை வீராங்கனையாக ரேஷ்மி எஸ். சிறப்பிடம் பெற்றுள்ளார்.
ரேஷ்மியின் இந்த வெற்றிக்கு அவரது தொடர்ச்சியான பயிற்சி, ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் பயிற்சியாளர்களின் வழிகாட்டுதல் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அவரது சாதனைக்கு வுஷூ வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் இரட்டை தங்கம் வென்று திண்டுக்கல் திரும்பிய ரேஷ்மிக்கு, திண்டுக்கல் ரயில்வே ஜங்ஷனில் நேற்று மாலை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து ரவுண்ட் ரோடு, பொன்ராம் பிரியாணி அருகே அமைந்துள்ள வுஷூ பள்ளியில் பாராட்டு மற்றும் வரவேற்பு விழா நடைபெற்றது.
விழாவில் வுஷூ பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்டு ரேஷ்மிக்கு மாலை அணிவித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்தினர்.
சர்வதேச போட்டியில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மாணவியின் சாதனையை அனைவரும் பாராட்டினர்.
“ஒரு மாணவியின் வெற்றி, பல மாணவர்களின் கனவுகளுக்கு ஊக்கமாக அமையட்டும். ரேஷ்மி எதிர்காலத்தில் ஆசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளிலும் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும்” என வுஷூ சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
திண்டுக்கலின் பெருமை… தமிழ்நாட்டின் பெருமை… இந்தியாவின் பெருமை!
