தழிஞ்சி மலைவாழ் மக்கள் தொடக்கப் பள்ளியில், உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியின் பொருளாதாரத் துறை சார்பில் சிறப்பு விரிவாக்கத் திட்ட முகாம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

இம்முகாமில், பள்ளி மாணவ-மாணவியருக்கு இணையதளம் வாயிலாக இலவசமாக சுகாதார அட்டைகள் (Health Cards) பதிவு செய்து வழங்கப்பட்டன. தொடர்ந்து, தமிழக அரசின் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின்கீழ், மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் ஆடல், பாடல் மற்றும் கதைகள் மூலம் எளிய முறையில் பாடங்கள் கற்பிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியை கல்லூரி பொருளாதாரத் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை பொருளாதாரத் துறை பேராசிரியர்கள் முனைவர் ச. ஸ்ரீபிரியா மற்றும் முனைவர் தி. ஜெயந்தி ஆகியோர் மேற்கொண்டனர்.
விழாவின் நிறைவாக, மாணவர்களுக்கு சுகாதார அட்டைகளுடன் சோப்பு, சீப்பு, பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. இவற்றை கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், தழிஞ்சி கிராமப் பள்ளி தலைமை ஆசிரியர் பக்ருதீன் மற்றும் பிரியங்கா ஆகியோர் இணைந்து வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் டாக்டர் அப்துல் கலாம் மக்கள் பாதுகாப்பு சேவை அறக்கட்டளையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கிராமப் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
