தமிழக அரசு ஆவணங்களில் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் நிலத்தடி நீர்மட்டம் பெருமளவு பாதாளத்திற்குச் சென்று கடும் நீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் நடைபெற்ற இயற்கை வளங்கள் அழிப்பு, கனிம வளக் கொள்ளை, நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மற்றும் திட்டமிடப்படாத நகரமயமாக்கல் கொள்கைகளே மாவட்டத்தின் இன்றைய வறட்சி நிலைக்கு முதன்மையான காரணங்கள் என்று இயற்கை சார்ந்த சமூக ஆர்வலர்களின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதுகுறித்து சி.பி.ஐ.எம்.எல் (CPIML) கட்சியின் மாநில குழு உறுப்பினர் செள.மீனாட்சி சுந்தரம் மாவட்ட நிர்வாகத்திற்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
“திண்டுக்கல் மாவட்டத்தை வறட்சியின் பிடியில் இருந்து மீட்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் மாவட்ட ஆட்சியர் உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
வரவிருக்கும் பருவமழை காலங்களில் மழைநீரைச் சேமிக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள குளங்கள், ஏரிகளைத் தூர்வாரி பராமரிக்க வேண்டும். மேலும் ஆற்றுப்பாசன வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி, விவசாய பயன்பாட்டிற்கான நீர் பகிர்வை முதன்மை கொள்கையாகக் கொண்டு மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும்.” விவசாய நிலங்களைப் பாதுகாக்கவும், குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவும் மாவட்ட ஆட்சியர் இந்த கோரிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
