புத்தன்பங்களா சாலையில் உள்ள சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதிகளை இரவு நேரத்தில் ஆய்வு செய்ய வலியுறுத்தல்
நாகர்கோவில் புத்தன்பங்களா சாலையில் செயல்பட்டு வரும் சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதிகளில் இரவு நேரங்களில் மதுபானம் அருந்தப்படுவதாகவும், மறுநாள் காலையில் விடுதி வளாகத்தில் காலி மதுபாட்டில்கள் மற்றும் சிகரெட் பொருட்கள் கிடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்தப் புகார் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் சௌத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்கள் தங்கியுள்ள வளாகத்தில் மதுபாட்டில்கள் கிடப்பது குறித்து அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மதுபானம் மற்றும் புகையிலைப் பொருட்கள் விடுதி வளாகத்துக்குள் எவ்வாறு வந்தன என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்றும், மாணவர்கள் அல்லது விடுதி நிர்வாகத்துடன் தொடர்புடையவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனரா என்பதை விசாரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நீண்டகாலமாக ஒரே விடுதியில் பணியாற்றி வரும் காப்பாளர்கள் மற்றும் பணியாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள், மாணவர் விடுதி நிர்வாகம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர் விடுதிகளிலும் திடீர் இரவு நேர ஆய்வு நடத்தி, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு நடைமுறைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் விசிக கோரிக்கை விடுத்துள்ளது.
தவறு உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேவேளையில், மாணவர்களுக்கு மதுபானம் மற்றும் புகையிலைப் பொருட்களின் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இந்தப் புகார் குறித்து அதிகாரிகள் விரைவாகவும் நடுநிலையாகவும் விசாரணை நடத்த வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழக விடியல் செய்திகளுக்காக எம். எஸ். ஜெனீர்
