உடல், மனநலத்தை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட காவல்துறை முன்னெடுப்பு
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூன் 20) மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், காவல்துறையினரின் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு யோகாசனங்கள் மற்றும் சுவாசப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
தினசரி காவல் பணிகளில் நீண்ட நேர சேவை, மனஅழுத்தம் மற்றும் உடல் சோர்வு போன்ற சவால்களை காவல்துறையினர் தொடர்ந்து எதிர்கொள்வதால், அவர்களின் உடல் தகுதியையும் மன உறுதியையும் வலுப்படுத்தும் வகையில் இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறையினரின் நலனை முன்னிறுத்தி உடல்நலம், மனநலம் மற்றும் மனஅழுத்த மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை தொடர்ந்து நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்த சிறப்பு பயிற்சி நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த முயற்சி காவல்துறையினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், பணித் திறன் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நிகழ்வாக அமைந்தது.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
