நாகர்கோவில், பிப்ரவரி 11:
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் (விசிக) தனக்கான அங்கீகாரம் கிடைக்காத அதிருப்தியில், அக்கட்சியின் முன்னாள் நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல் காலித் புதிய கட்சி தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகர விசிக மாவட்ட செயலாளராகப் பதவி வகித்து வந்தவர் அல் காலித். சமீபத்தில் அப்பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
கட்சிக்காகத் தான் ஆற்றிய களப்பணிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், கட்சித் தலைமை தன்னைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும் அவர் வேதனை தெரிவித்து வந்தார்.
விசிக தனக்கான பிரதிநிதித்துவத்தைத் தர மறுத்துவிட்டதாகத் தனது சமூக வலைதளப் பக்கங்களிலும் அவர் வெளிப்படையாகவே அதிருப்தியைப் பதிவு செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், அவர் தனது அரசியல் பயணத்தைத் தனித்துப் தொடர முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தனது ஆதரவாளர்களுடன் இணைந்து விரைவில் புதிய கட்சியைத் தொடங்கும் திட்டத்தில் அல் காலித் இருப்பதாகவும், அதற்கான முதற்கட்ட பணிகளில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.
புதிய கட்சிக்கான கொடி குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நீலம், வெள்ளை மற்றும் பச்சை நிறங்கள் கொண்ட அந்தக் கொடியின் மையத்தில், சிகப்பு நட்சத்திரம் இடம் பெறும் வகையில் வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசியல் களத்தில் ஈடுபடும் நோக்கோடு, விரைவில் புதிய கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அல் காலித் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி : தமிழக விடியல் மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
