அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை மீறிய சேர்க்கை குற்றச்சாட்டு; மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் மனு
கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் முகில் சட்டக் கல்லூரியைச் சுற்றி உருவாகியுள்ள சேர்க்கை சர்ச்சை, 60க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி எதிர்காலம் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை மீறி மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் முதல் ஆண்டு எல்.எல்.பி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உடனடி தலையீடு கோரியுள்ளனர்.
படந்தாலுமூடு பகுதியில் இயங்கும் இந்த சட்டக் கல்லூரியில், 2025–2028 கல்வியாண்டிற்கான முதல் ஆண்டு எல்.எல்.பி படிப்பில் மொத்தம் 120 மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வழங்கிய அங்கீகாரம் 60 மாணவர்களுக்கு மட்டுமே இருந்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்களின் குற்றச்சாட்டின்படி, அனைத்து 120 மாணவர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு பல்கலைக்கழகத்திற்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தொடக்க கட்ட விசாரணையில் மாணவர்கள் தேர்வு எழுத இடைக்கால அனுமதி வழங்கப்பட்டதாகவும், பின்னர் பல்கலைக்கழகம் மேல்முறையீடு செய்து தடையுத்தரவு பெற்றதாகவும் மாணவர்கள் கூறியுள்ளனர். பல்கலைக்கழகம், கல்லூரி விதிமுறைகள் மற்றும் ஒழுங்குகளை முறையாக பின்பற்றவில்லை என்ற காரணத்தை முன்வைத்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, அங்கீகாரம் பெற்ற 60 மாணவர்கள் மட்டும் முதல் பருவத் தேர்வை எழுதியுள்ளதாகவும், மீதமுள்ள 60 மாணவர்களின் கல்வி நிலைமை தெளிவின்றி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கடும் மனஅழுத்தத்திற்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், வழக்கு தொடர்பான தகவல்கள் பெற்றோருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்றும் மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஒரு ஆண்டு காலமாக வகுப்புகள், உள்தேர்வுகள் மற்றும் விவா உள்ளிட்ட கல்விசார் நடவடிக்கைகளில் பங்கேற்று வந்த பின்னரே இந்த பிரச்சினை தீவிரமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும், கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் அவர்கள் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம், தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை நடைமுறைகள் எவ்வாறு கண்காணிக்கப்படுகின்றன என்ற கேள்வியை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது. குறிப்பாக சட்டக் கல்வி போன்ற தொழில்முறை படிப்புகளில் விதிமுறைகள் மற்றும் அங்கீகார நடைமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் புதிய கவலை உருவாகியுள்ளது.
இந்த மனு வழங்கும் நிகழ்வில், குருந்தன்கோடு ஒன்றிய செயலாளர் மணி பாபு முன்னெடுப்பில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் சௌத்ரி, மகளிர் விடுதலை இயக்க மாநிலச் செயலாளர் கலைச்செல்வி, மாவட்ட துணைச் செயலாளர் அம்பேத்வளவன், தெற்கு மாநில பகுதி செயலாளர் ஸ்ரீகுமார், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி நிர்வாகக் குழு உறுப்பினர் செல்வி, மகளிர் விடுதலை இயக்க மாவட்ட துணைச் செயலாளர் சல்பேஸ்வரி, நில உரிமை மீட்பு இயக்க மாநில துணைச் செயலாளர் நாஞ்சில் துரை, தோவாளை ஒன்றிய தெற்கு செயலாளர் செல்வம் மற்றும் கருப்பு ரெஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
