திருநெல்வேலி,அக்.27:-
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரத்தை அடுத்துள்ள “கூடங்குளம்” அருகே, இன்று ( அக்டோபர். 27) காலையில் நிகழ்ந்த சாலை விபத்து, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடங்குளத்திலிருந்து 30 பயணிகளுடன், நாகர்கோவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த, “தமிழ்நாடு அரசு” போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான, திருநெல்வேலி பணிமனைப் “பயணிகள் பேருந்து”, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி, விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தினால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும், ஒரு சில பயணிகள் சிறு-சிறு காயங்களுடன், உயிர் தப்பினர். தகவல் அறிந்த கூடங்குளம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக, உடனடியாக மாற்றுப் பேருந்தில், அனுப்பி வைக்கப்பட்டனர்.

பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து, அரசுப் போக்குவரத்துக்கழகம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் மேலப்பாளையம் ஹஸன்.
