Headlines

ரஷ்ய எண்ணெய் விவகாரம்: அமெரிக்காவின் ‘அனுமதி’க்காகக் காத்திருக்கும் நிலையிலா இந்தியா?

ரஷ்ய எண்ணெய் விவகாரம்: அமெரிக்காவின் 'அனுமதி'க்காகக் காத்திருக்கும் நிலையிலா இந்தியா?

நடுக்கடலில் தேங்கியுள்ள ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கிக்கொள்ள, இந்தியாவிற்கு அமெரிக்கா 30 நாட்கள் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.

உலகளாவிய பொருளாதார நலன் சார்ந்த இந்த அறிவிப்பு, தற்போது இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் இறையாண்மை சார்ந்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

“சுதந்திர நாடான இந்தியா, தனது நாட்டு மக்களின் தேவைக்கான கச்சா எண்ணெயை யாரிடம், எப்போது வாங்க வேண்டும் என்பதற்கு அமெரிக்காவிடம் ஏன் அனுமதி பெற வேண்டும்?” என்ற கேள்வி தற்போது அரசியல் களத்திலும், சமூக வலைத்தளங்களிலும் வலுவாக எழுந்துள்ளது.

நமது நாட்டின் வர்த்தக முடிவுகளை மற்றொரு நாடு தீர்மானிப்பது ஏற்புடையதா என எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அமெரிக்காவின் நிர்ப்பந்தம் என்ன?

உக்ரைன் போரைக் காரணம் காட்டி, ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தக் கோரி அமெரிக்கா உலக நாடுகளுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

குறிப்பாக, அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு, ‘ரஷ்ய எண்ணெய் கொள்முதலைக் குறைக்காவிட்டால், இந்தியப் பொருட்கள் மீது 25% கூடுதல் வரி விதிக்கப்படும்’ என சமீபத்தில் எச்சரித்தது.

இந்த வர்த்தக நெருக்கடியின் காரணமாகவே, இந்தியா தனது கொள்முதலைக் கணிசமாகக் குறைக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டது.

திடீர் தளர்வுக்குக் காரணம் என்ன?

தற்போது மத்திய கிழக்கில் (ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா) போர் பதற்றம் நிலவுவதால், ஹார்முஸ் ஜலசந்தி வழியான கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இதனால் உலக சந்தையில் எண்ணெய் விநியோகம் தடைபட்டு விலைகள் கிடுகிடுவென உயர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே அமெரிக்கா இந்த 30 நாள் தளர்வை அறிவித்துள்ளது.

“சந்தைக்கு எண்ணெய் கிடைப்பதை உறுதி செய்யவே இந்த முடிவு” என அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசன்ட் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

இந்த தற்காலிக விலக்கு என்பது உலகளாவிய எண்ணெய் தட்டுப்பாட்டைச் சமாளிக்க இந்தியா தனது சொந்த நலனுக்காக எடுத்த முடிவாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் எரிசக்தி பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் இது போன்ற வெளிநாடுகளின் தலையீடும், பொருளாதார நிர்ப்பந்தங்களும் இந்தியாவின் சுதந்திரமான வர்த்தகக் கொள்கைக்கு விடப்படும் சவாலாகவே விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *