திருநெல்வேலி, அக். 2:-திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரன், இன்று ( அக்டோபர். 2) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் குறிப்பிட் டிருப்பதாவது:-“சமீப காலங்களில், சமூக ஊடகங்கள் வாயிலாக, சில இளைஞர்கள் தங்களது சமுதாயத்தை உயர்த்தும் விதமாகவும், பிற சமுதாயங்களை தரம் தாழ்த்தும் விதமாகவும், உள்ளடக்கங்களை பகிர்ந்து வருகின்றனர். இது, சமூகத்தில் ஜாதிய உணர்வுகளை தூண்டும் அபாயத்தை உருவாக்கி, பொதுமக்களிடையே தவறான புரிதல்கள் மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
சமூக அமைதிக்கு இடையூறாக அமையக்கூடிய பதிவுகளை, உருவாக்கும் மற்றும் பகிரும் நபர்களை அடையாளம் காணும் பணியில், மாவட்ட காவல்துறையினர், தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, தடை செய்யப்பட்ட, அபாயகரமான ஆயுதங்களை காட்சிப்படுத்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட பதிவுகள் தொடர்பாக, குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சமூக வலைதளங்களில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில், பிரச்சனைக்குரிய பதிவுகளை வெளியிடும் நபர்களை, அடையாளம் கண்டறிந்து, நடவடிக்கை எடுப்பதுடன், மேற்படி நபர்களின் சமூக வலைதளக் கணக்குகளில், பின் தொடர்பவர்கள் , பதிவுகளும், தீவிரமாக ஆய்வு செய்யப்படுகின்றன. இதில், சட்ட முரண்பாடுகள் இருப்பதாக தெரியவரும் பட்சத்தில், அவர்கள்மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கைது செய்யப்படும் நபர்களின் சமூக வலைத்தளக் கணக்குகள், வாட்ஸ்அப் குழுக்கள் உள்ளிட்டவை, முழுமையாக கண்காணிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்படுகின்றன. இதில், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்கள்மீதும் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மாவட்ட காவல்துறையினரால்,தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சிகள் மூலம், ஜாதி சார்ந்த பிரச்சனைகளின் தீவிரம் மற்றும் அதன் சமூகப் பின்விளைவுகள் குறித்து, மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
சமூக ஊடகங்களில் வெளியிடப்படும், சட்டம் ஒழுங்கை பாதிக்கக்கூடிய பதிவுகள் மீது, காவல்துறையின் சமூக ஊடக பிரிவு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறது.
சமூக வலைதளங்களில் பதிவிடப்படும், பிரச்சனைக்குரிய பதிவுகள், சாதிய ரீதியிலான பிரச்சனைகளுக்கு முக்கிய காரணியாக இருந்து வருவதால், இது போன்ற பதிவுகள் செய்பவர்கள் மீது, பாரபட்சமில்லாத தீவிர நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், நடப்பு 2025 காலண்டர் ஆண்டில், இதுவரையிலும் 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 105 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை உருவாக்கும் மற்றும் பரப்பும் நபர்கள்மீது நடவடிக்கைகள் மிகக் கடுமையாக, எந்தவித சமரசமும் இல்லாமல் மேற்கொள்ளப்படும்! என்பதை, மாவட்ட காவல்துறை வலியுறுத்துகிறது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, சமூக ஒற்றுமை மற்றும் பொது அமைதியை நிலைநிறுத்தும் நோக்குடன், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, கண்காணிப்பு மற்றும் உரிய சட்ட நடவடிக்கைகளை, தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது!”-இவ்வாறு, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன், தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.****
