திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வழக்கறிஞர் சண்முக கணேசன். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் பிள்ளைகள் உள்ளன. அவர்களுக்கு திருமணம் நடந்து குடும்பத்துடன் வெளியூரில் வாழ்ந்து வருகின்றனர்.
வீட்டில் வழக்கறிஞர் சண்முக கணேசன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தனியாக இருந்து வருகின்றனர்.
அவர்களுக்கு உதவியாக வீட்டில் பணி பெண்ணாக அதே பகுதியை சேர்ந்த லதா (வயது 50) என்பவர் கடந்த 11 மாதங்களாக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் பாதுகாப்பு கருதி பூஜை அறையில் மறைத்து வைத்திருந்த 39 சவரன் தங்க நகைகள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சடைந்துள்ளார்.
இது குறித்து சண்முக கணேசன் மனைவி கணவரிடம் கூறியதன் அடிப்படையில் அவரது மகன் சித்தார்த்தன் காந்தி பிரகாஷ் என்பவர் சம்பவம் குறித்து கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டில் பணி பெண்ணாக வேலை செய்து வந்த லதாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது லதா
முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளார்.
பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் 39 சவரன் தங்க நகையை கொள்ளையடித்தும், அதனை அடகு கடையில் வைத்து பணத்தை செலவினம் செய்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
பின்னர் அவரிடம் இருந்து 16 அரை சவரன் தங்க நகையை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.
வாணியம்பாடி அருகே வீட்டில் பணி பெண்ணாக வேலை செய்தவர் வீட்டில் 39 சவரன் தங்க நகையை கொள்ளை அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
