உதகை வட்டம், இத்தலார் பகுதியில் அமைந்துள்ளது மகாலிங்கா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் தலைமை வகிக்க, மரு. தே. சித்ரா மேலாண்மை இயக்குநர் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னிலை வகித்தார். இதில் சூரியன் மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூபாய்- 15,00,000/-ம் மற்றும் ஒரு நபருக்கு மாற்றுத்திறனாளி கடனாக ரூபாய் – 1,00,000/-ம் நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அவர்களால் வழங்கப்பட்டது.

அப்போது அவர் பேசுகையில் மகளிர் அனைவரும் சிறு, குறு தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று கூட்டு வட்டி எனும் கொடுமையில் சிக்கி, தங்களது சுயமரியாதை மற்றும் உழைப்பை இழக்காமல் இருக்க வேண்டுமென்றால் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக மட்டுமே கடன் பெற வேண்டும் எனவும் அவ்வாறு பெற்ற கடனை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்தி தங்களது பொருளாதார நலனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் செயலாளர் திரு. என்.சி. நடராஜன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சரக மேற்பார்வையாளர்கள் திரு. ரவி, திரு. மணிகுண்டன், சங்க பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
