கன்னியாகுமரி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை; புகாரின் அடிப்படையில் விசாரணை தீவிரம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு மற்றும் தரக்குறைவான கருத்துகள் பதிவிட்டதாகக் கூறப்படும் புகாரின் பேரில், 36 வயதுடைய பெண் ஒருவரை சைபர் கிரைம் போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.
அங்கன்வாடி ஊழியர்கள் அரசாங்கம் வழங்கும் பொருட்களை குழந்தைகளுக்கு வழங்காமல், அவற்றை தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி லாபம் அடைவதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டதாக அங்கன்வாடி ஊழியர்களின் கூட்டமைப்பு காவல்துறையில் புகார் அளித்திருந்தது. மேலும், அந்த பதிவுகளில் ஊழியர்களை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகளும் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்தப் புகாரைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ், உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.
விசாரணையில், பார்வதிபுரம் அருகே ஆலம்பாறை லேக்மி காலனியைச் சேர்ந்த டேவிட்சனின் மனைவி கௌசல்யா (36) என்பவர் தொடர்புடையவர் என போலீசார் கண்டறிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்து, சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சமூக வலைத்தளங்களில் தனிநபர் அல்லது குழுக்களின் கண்ணியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பதிவுகள் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இதுபோன்ற புகார்கள் தொடர்பாக சைபர் கிரைம் பிரிவு விசாரணைகளை தீவிரப்படுத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
