திண்டுக்கல், ஏப்ரல் 9:
திண்டுக்கல் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் (PRO office) உதவி மக்கள் தொடர்பு அலுவலராக (APRO) பணியாற்றி வரும் இளையேந்திரன் என்பவர், அரசு விதிகளுக்குப் புறம்பாக கடந்த 6 ஆண்டுகளாக ஒரே இடத்திலேயே பணியாற்றி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பணி இடமாற்ற விவகாரம்:
பொதுவாக அரசு ஊழியர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பணி இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது அடிப்படை விதியாகும். அந்த வகையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இளையேந்திரன் திண்டுக்கல்லில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
அமைச்சரின் உதவியுடன் மீண்டும் திண்டுக்கல்லில் நியமனம்:
தூத்துக்குடியில் பணியில் சேருமாறு உத்தரவிடப்பட்ட போதிலும், அவர் அங்கு சென்று பணியில் இணையவில்லை. மாறாக, செல்வாக்குள்ள அமைச்சர்களின் உதவியுடனும், மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடனும் தனது பணி இடமாற்ற உத்தரவை ரத்து செய்துள்ளார். தற்போது அவர் மீண்டும் திண்டுக்கல் மாவட்டத்திலேயே பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
தேர்தல் காலத்தில் சந்தேகம்:
தற்போது தேர்தல் காலம் என்பதால், தேர்தல் தொடர்பான முக்கிய அரசுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழலில், விதிகளுக்கு முரணாக ஒரு அதிகாரி ஒரே இடத்தில் நீடிப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரசு நிர்வாக நடைமுறைகளை மீறி, அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த பணி நியமனம் எவ்வாறு சாத்தியமானது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
