நாகர்கோவில் தொகுதியில் ஆளும் திமுக கட்சி சார்பில் ஒரே நேரத்தில் இரண்டு பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரப்பூர்வ வேட்பாளராக எஸ். ஆஸ்டின் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் தரப்பில் மட்டும் மூன்று வேட்புமனுக்களும், அதே கட்சியின் எம். சிவராஜ் தரப்பில் ஒரு வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டிருப்பது தொகுதி மக்களிடையேயும் அரசியல் களத்திலும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே தொகுதியில் ஒரு கட்சிக்கு ஏன் இத்தனை மனுக்கள் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழலாம். இது எந்தவித உள்கட்சிப் பூசலும் அல்ல; ஆவணங்களில் ஏதேனும் சிறிய பிழைகள் காரணமாக ஒரு மனு நிராகரிக்கப்பட்டாலும் மற்றொன்று ஏற்கப்படும் என்ற முன்னெச்சரிக்கைக்காகவே ஆஸ்டின் மூன்று மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, அதிகாரப்பூர்வ வேட்பாளரின் மனுக்கள் பரிசீலனையின் போது எதிர்பாராதவிதமாக முழுமையாக நிராகரிக்கப்பட்டால், கட்சியின் சின்னமும் போட்டியிடும் வாய்ப்பும் பறிபோய்விடக் கூடாது என்பதற்காக, மாற்று வேட்பாளர் என்ற முறையில் சிவராஜையும் கட்சித் தலைமை களமிறக்கியுள்ளது.
ஆக, இது தேர்தல் ஆணையத்தின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, கட்சியின் சின்னத்தை பாதுகாப்பாகத் தக்கவைக்க கையாளப்படும் நுட்பமான அரசியல் வியூகத்தை கையாண்டுள்ளது குமரி மாவட்ட திமுக!
செய்தி : ஜெனீர் (நிருபர்)
