திருநெல்வேலி,அக்.24:-
நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாதத்தின் 4-வது வெள்ளிக்கிழமையான இன்று (அக்டோபர்.24) காலையில், மாதாந்திர “விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” நடைபெற்றது.
இநத கூட்டத்திற்கு தலைமை வகித்த, “மாவட்ட ஆட்சித்தலைவர்” டாக்டர் இரா. சுகுமார், கூறியதாவது:- “திருநெல்வேலி மாவட்டத்தில், சென்ற மாதம் (செப்டம்பர்) முடிய மொத்தம் 14.80 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இது இதே காலத்தில், இம்மாவட்டத்தில் வழக்கமாக பெய்யும் மழையளவான 30.20 மில்லி மீட்டர் மழையளவை விட, 50.99 சதவிகிதம் குறைவாகும்.
மேலும் நடப்பு அக்டோபர் மாதத்தில், நேற்று (அக்டோபர். 23) முடிய, 198.95 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
இது இம்மாத வழக்கமான மழையை விட 19.85 சதவிகிதம் அதிகம் ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், இடைவிடாது பெய்த தொடர்மழையின் காரணமாக, இம்மாவட்டத்தின் அனைத்து அணைகளிலும், போதமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.
இம்மாவட்டத்தில், நடப்பாண்டில் இதுவரை 25,198 ஹெக்டேர் பரப்பளவில் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
மழை மற்றும் அணைகளின் நீர் வளம் ஆகியவற்றின் காரணமாக, சென்ற ஆண்டைவிட 498 ஹெக்டேரில் நெல் சாகுபடி அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு (2025) கார் பருவத்தில் அறுவடையான நெல் கொள்முதலுக்காக, 37 இடங்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரையிலும் 21177.92 மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்படடுள்ளது.
இந்த மாதம் பெய்த கனமழையினால் மானூர், பாளையங்கோட்டை, வள்ளியூர், களக்காடு, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளில், அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மற்றும் வாழைப்பயிர்கள் பெருமளவில் சேதம் அடைந்துள்ளன.
இது பற்றிய விபரங்கள் சேகரிப்பட்டு வருகினறன. விரைவில், அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு, நிவாரணம் கிடைக்க வழி வகை செய்யப்படும்.
கூட்ட முடிவில், நலத்திட்ட உதவிகளை, விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, களக்காடு – முண்டன்துறை புலிகள் காப்பக துணை இயககுநர் SRI காந்த், மாவட்ட வன அலுவலர் இளங்கோ உட்பட பலர், கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: “மேலப்பாளையம்” ஹஸன்.
