திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாலாறு பொருந்தல் அணையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் சார்பாக மீன் விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு குறைந்த விலையிலும், புதியதாகவும் மீன் கிடைக்கும் என்பதால் பழனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இங்கு நேரில் சென்று மீன் வாங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த மீன் விற்பனை மையத்தில் பொதுமக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்றும், வியாபாரிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள், அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களுக்கு மீன்களை வழங்காமல் அலட்சியம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் மணி கணக்கில் காத்திருக்கும் பொதுமக்கள் இறுதியில் மீன் எதுவும் கிடைக்காமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை நீடிக்கிறது.
அதேவேளையில், பாலாறு பொருந்தல் அணை விற்பனை மையத்தில் கிடைக்காத மீன்கள், பழனி நகரப் பகுதியில் உள்ள தனியார் மீன் கடைகளில் தாராளமாகக் கிடைக்கின்றன. அணை விற்பனை மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள், மீன்கள் அனைத்தையும் மொத்தமாக கை வியாபாரிகளுக்கே வழங்கி விடுவதால், பொதுமக்கள் வேறு வழியின்றி நகரப் பகுதி கடைகளில் அதிக விலை கொடுத்து மீன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, பொதுமக்களின் பயன்பாட்டிற்காகச் செயல்படும் அரசு மீன் விற்பனை மையத்தில் நடைபெறக்கூடிய இந்த முறைகேடுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்றும், பொதுமக்களுக்குச் சீரான முறையில் மீன் கிடைப்பதை உறுதி செய்து, தவறு இழைக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பழனி பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
