பழனி: பழனி அருகில் உள்ள மானூர் கிராமத்தில் சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படாததால், குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி டெங்கு, காலரா போன்ற கொடிய நோய்கள் பரவும் பேராபத்து ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
மானூர் கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் பின்புறம், சாகுல் மளிகை கடைக்கு பின்புள்ள பகுதியில் சாக்கடை கால்வாயில் கடும் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் மெயின் ரோட்டிலேயே தேங்கி நின்று குளம் போல் காட்சியளிக்கிறது.
இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருகின்றன.
இதுகுறித்து மானூர் ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பலமுறை நேரில் சென்று புகார் அளித்தும், இதுவரை எந்தவொரு தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் மிகுந்த வேதனையுடன் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது நோய் பரவும் சீசன் என்பதால், உடனடியாக டெங்கு, காலரா போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட வேண்டும் என்றும், தேங்கியுள்ள சாக்கடை நீரை அப்புறப்படுத்தி கால்வாயைச் சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
